1948ல் டான் பிராட்மேன் vs சதாசிவம்...... இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்........... சதாசிவத்தின் இரண்டாம் பாகம்.....

  1948ல் டான் பிராட்மேன் vs  சதாசிவம்...... 

 இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........

சதாசிவத்தின் இரண்டாம் பாகம்.....


சதாசிவம் முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் அவுட்டாகினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய  பந்து வீச்சாளர்களை ஓட ஓட விரட்டினார் சதாசிவம். அந்த சமயத்தில் இந்திய அணியில் லாலா அமர்நாத், பானர்ஜி, மங்கட், சிஎஸ் நாயுடு போன்ற பலமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். சிலோன் அணி அடித்த 225 ஓட்டங்களில் சதாசிவம் மட்டும் 111 ஓட்டங்கள் அடித்தார். அவரது துடுப்பாட்டத்தை ரசித்த இந்திய அணியின் கேப்டன் விஜய் மெர்சன்ட், சிலோன் அணியின் உடைமாற்றும் அறைக்கே சென்று, சதாசிவத்திற்கு விக்கெட்டினை பரிசாகக் கொடுத்தார். இன்னொரு சம்பவம் 1947-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் இந்திய அணிக்கு எதிரான போட்டி. சேப்பாக்கம் மைதானத்தில் பல வீரர்கள் பல சிறப்பான துடுப்பாட்டத்தை விளையாடியுள்ளனர். ஆனால், சதாசிவம் விளையாடியது போன்று வேறு எந்த துடுப்பாட்ட வீரராலும் விளையாட முடியவில்லை என இந்தப் போட்டியை நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

சாய்வான தொப்பியை அணிந்து கொண்டு, கழுத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மிகவும் சாதரணமாக களம் இறங்கிய சதாசிவம், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டி அடித்திருக்கிறார். சென்னை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த சதாசிவம் அன்று மொத்தமாக அடித்த ரன்கள் 215. சென்னையில் ஒரு இரட்டைச்சதம். 

மற்றொரு முக்கியமான போட்டி 1950-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் IX அணியுடனான போட்டி. இந்த அணியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அப்போதைய பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிலோன் அணி 153 சகல விக்கெட்டினையும் இழந்தது. ஆனால், அதில் சதாசிவம் அடித்த  ஓட்டங்கள் மட்டும் 96. அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது அனைத்து வீரர்களும் இரு பக்கமும் நின்று கை தட்டி பாராட்டி வழியனுப்பினர். 'சிறந்த உலக அணியை தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் முதல் ஆளாக சதாசிவத்தை தான் தேர்ந்தெடுப்பேன்' என்றார் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ஃப்ராங்க் வோரல். சதாசிவத்தின் துடுப்பாட்டம் எந்தளவிற்கு சிறப்பாக இருந்ததோ, அதை விட அவரைப் பற்றி பல சர்ச்சைகள் வலம் வந்தன. ஒழுக்க குற்றச்சாட்டுகள் அவர் மீது அடுக்கப்பட்டன. 90-களில் ஜெயசூர்யா துடுப்பு மட்டையில் ஸ்பிரிங் வைத்திருந்தார் என்பது போல, 50-களில் சதாசிவம் துடுப்பெடுத்தாட வரும்  போது கூல் டிரிங்ஸில் மது நிரப்பிக் கொடுக்கிறார்கள் என்கிற வதந்தியும் உலா வந்தது. 1948-ம் ஆண்டு டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்திருந்த போது, இலங்கை அணிக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சதாசிவம். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த சிலோன் அணியின் தலைவராக சதாசிவம் எனும் தமிழர் பொறுப்பேற்று விளையாடியது மிகப்பெரிய சாதனையாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த சதாசிவத்தின் கிரிக்கெட்  வாழ்க்கையில் பேரிடி ஒன்று தாக்கியது. தனது அழகான துடுப்பாட்டத்தால் பல பெண்களின் மனதைக் கவர்ந்த சதாசிவத்தின் மீது, 1951ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த கொலை வழக்கு மிக பிரசித்தம் பெற்றிருந்தது. பத்திரிகைகளிலும்< வானொலியிலும் இக்கொலையே பேசுபொருளாக இருந்தது. கொலைப் பழி காரணமாக சிறை தண்டனை அனுபவித்த சதா விசாரணையின் பின் 20 மாதங்களில் நிரபராதி என விடுவிக்கபட்டார்.

விடுதலைக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் குடியேறி அங்கு  இவோன் ஸ்டீவன் என்பவரை மணந்தார். இதன் பின் மலேசியாவில் குடியேறிய  சதாசிவம், இருநாட்டு அணிகளுக்கும் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை வகித்தார். இன்று வரை மாபெரும் சாதனையை இந்த தழிழன் செய்துள்ளான் என்றால் இது மிகையாகாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு தலைவராக இருந்தவர் என்கிற சாதனை சதாசிவத்திடம் தான் இருக்கிறது. மற்ற துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை எடுக்க திணறும் மைதானத்தில் சர்வ சாதரணமாக சதம் அடிக்கும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அது சதாசிவத்திடம் இருந்தது. 

இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்கு முன்பே இவர் விளையாடியதால் பலருக்கு இவரைப் பற்றி தெரியாமல் போனது. மொத்தம் 11 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சதாசிவம், மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதம் என 753 ஓட்டங்கள் அடித்துள்ளார். நவீன கால கிரிக்கெட் நிபுணர்கள் இவரை ஒரு துடுப்பாட்ட வீரராக கூட கருதாதது தான் மிகப்பெரிய சோகம். இன்று ஒரு T20 போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்தாலே பெரிய துடுப்பாட்ட வீரர் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அன்று அவர் சென்னையில் அடித்த இரட்டை சதம் பல நூறுகளுக்குச் சமம். திறமை இருந்தால் எங்கும் வெற்றி பெறலாம் என்பார்கள். ஆனால், திறமையிருந்தாலும் நீங்கள் சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். சதாசிவம், ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பிறந்திருந்தால் கிரிக்கெட்டின் பிதாமகன் என கொண்டாடப்பட்டிருப்பார் என்பதே உண்மை!

பலராலும்  போற்றப்பட்ட தமிழரான மகாதேவன் சதாசிவம் 1977 யூலை 09 இவ்வுலகை விட்டு பிறிந்து சென்றார். இது போன்ற இன்னும் பல தமிழர்கள் இலங்கை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியதை இனிவரும் காலங்களில் நாம் பார்ப்போம்.




Comments